×

கோயில் தொடர்பான பொதுநல வழக்கு தொடர்ந்தவர் நேர்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் தொகை தர முடியும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கோயில் தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடர்ந்து வரும் திருச்சி ரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 7 பொதுநல வழக்குகளை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுக்களில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படும் வரை நிர்வாக பணிகளை கவனிக்க தக்கார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயில்களில் இதுபோன்ற நியமனங்கள் உள்ளது. இது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது.

அவ்வாறு நியமிக்கப்படும் தக்கார் கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் உள்ளிட்டோராக இருக்கின்றார். இவ்வாறு நியமிக்க இந்து அறநிலைய துறை சட்டத்தில் இடமில்லை. அறங்காவலர் தான் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். தக்கார்களை அறநிலையத்துறை நியமிப்பது சட்டவிரோதம். தக்கார்களின் முன்னிலையில் உண்டியல் திறக்க அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த 7 வழக்குகளுக்கும் மனுதரார் தனது நேர்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் தலா 50 ஆயிரம் என மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.

வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, எனது மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் வழக்கின் உண்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் செலுத்திய 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திரும்ப வழங்க வேண்டும் என்று கோரினார். இதைக்கேட்ட நீதிபதிகள், மனுவை இன்னும் அனுமதிக்கவில்லை. எதிர் தரப்பில் பதில் அளிக்க மட்டுமே உத்தரவிட்டுள்ளது. எனவே வழக்கில் உங்களின் நேர்மை தன்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் தொகையை திரும்ப அளிக்க முடியும். தற்போதைக்கு பணத்தை திரும்ப அளிப்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றனர்.

The post கோயில் தொடர்பான பொதுநல வழக்கு தொடர்ந்தவர் நேர்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் தொகை தர முடியும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Rangarajan Narasimhan ,Trichy rangat ,Chennai High Court ,Hindu Religious Endowment Department ,Dinakaran ,
× RELATED பொதுநல வழக்கு: ரங்கராஜன் நரசிம்மன்...